“இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்” (ஓசியா 14:1).
ஆண்டவருடைய அன்பினால் கொடுக்கப்படுகிற ஒரு எச்சரிப்பாய் இது இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். ஒருவேளை இந்த நாட்களில் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனை விட்டுப் பின்வாங்கிப் போயிருப்பீர்கள் என்றால், அவர் உங்கள் பெயரைச் சொல்லி அழைக்கிறார். தேவன் நம்மில் அன்புகூருகிறதின் நிமித்தமாகவே அவர் பெயர்ச் சொல்லி அழைக்கிறார். இன்னுமாக இந்த தேவன் உன்னுடைய தேவனாகவே இருக்கிறார். தேவனுடைய அன்பும் பொறுமையும் மிகப் பெரியது. இதை நாம் சிந்திக்கும்பொழுது நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை ஆண்டவர் வைத்திருக்கிறார்! நாம் தேவனிடத்தில் திரும்புவது அவசியம். அப்பொழுது மாத்திரமே நம்முடைய காரியம் செவ்வைப்படுத்தப் படும். நம்முடைய பாவத்தினாலே நாம் விழுந்தோம். அது நமக்கும் ஆண்டவருக்கும் இருக்கும்படியான அன்பின் இணைப்பைத் துண்டித்து விடுகிறது. நாம் கைவிடப்பட்டவர்களைப் போலக் காணப்படுகிறோம். ஆனாலும் தேவன் இன்று உங்களை அழைக்கிறார். நாம் எந்த நிலையிலிருந்து விழுந்தோம் என்பதை எண்ணி மனந்திரும்புவோம். கர்த்தரிடத்தில் திரும்புவோம். அவர் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுவார். அப்பொழுது தேவனுடைய மகிமை நம் வாழ்க்கையில் விளங்கும்.