தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
(சங்கீதம்51 : 17)
சங்கீதம் 51 : 10 - 19
10. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
11. உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
12. உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
13. அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
14. தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
15. ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
16. பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
17. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
18. சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
19. அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பலிகள் ஆண்டவராகிய இயேசுவில் நிறைவேறிவிட்டது. ஆகவே அந்த பலிகளை இன்று நாம் செலுத்துவதில்லை. அந்த பலிகள் இயேசு ஆண்டவரின் பலியை நிழலாட்டமாய்க் காண்பிக்கிறவைகள். ஆனாலும் ஆவிக்குரிய பலிகள் இன்றும் நமக்குப் பொருந்தும். ஸ்தோத்திரபலியைப் போல நொறுங்குண்ட இருதயமும் தேவனுக்கேற்கும் பலியே. உங்கள் இருதயத்திலிருந்து அவ்விதமான பலிகளை நீங்கள் செலுத்துகிறீர்களா? அவை நமது ஆத்துமாவிற்கு மிகவும் அவசியமானவைகள். தேவன் நம்முடைய அநேக பாவங்களை மன்னித்திருப்பதை நினைவுகூறும்பொழுதும், தேவன் நம்முடைய பாவங்களுக்குதக்கதாக நம்மைத் தண்டிக்கவில்லை என்பதை நினைக்கும்பொழுதும் நிச்சயமாக நம்முடைய இருதயம் உடைபடவேண்டும். உடைப்பட்ட இருதயத்திலிருந்து தேவனை நன்றியோடு துதிப்பது ஸ்தோத்தரிப்பது தேவனுக்குச் செலுத்தும் பலி. இவ்விதமான பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.’ தாவீது பாவத்தில் விழுந்த பின்பு நாத்தான் தீர்க்கத்தரிசியினால் உணர்த்தப்பட்டபொழுது தாவீதின் இருதயம் உடைபட்டது. தேவனுக்கு முன்பாக தான் பண்ணின துரோகத்தையும், தன்னுடைய பாவத்தினிமித்தம் தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டதென்பதையும் நினைவு கூர்ந்தான். இவ்வளவு பெரிய பாவியாய் நான் இருக்கிறேனே என்ற உணர்வோடு அவன் தன்னை முற்றிலும் தேவனுக்கு முன்பாக தாழ்த்தினான். தேவன் அவ்விதமான நொறுங்குண்ட இருதயத்தை, அதிலிருந்து வந்த விண்ணப்பத்தை அங்கீகரித்தார்.
பேதுருவும்கூட தேவனை எவ்வளவு சீக்கிரம் மறுதலித்தான் என்பதை, தான் உணர்ந்தபோது மனங்கசந்து அழுதான். பேதுருவை தேவன் மன்னித்தார். நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயமும் அவ்விதமான இருதயத்திலிருந்து வரும் ஜெபமும் ஒருக்காலும் தேவனால் புறக்கணிக்கப்படமாட்டாது.
ஆதாம், ஏவாளை தேவன் உருவாக்கி நீ இந்தக்கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்றார். அப்படியே அவர்கள் அந்தக் கனியை புசித்தப்போது உடனடியாக அதே இடத்தில் விழுந்து செத்துவிட்டார்களா? இல்லை. அப்படியானால் தேவன் சொன்ன சாகவே சாவாய் என்பதின் அர்த்தம் என்ன? ஆம்! அவர்கள் தேவனுக்கு கீழ்படியாமல் போனபோது அவர்கள் ஆத்துமாவில் மரித்துப்போனார்கள். தேவனோடு கொண்டிருக்கும் தொடர்புக்கு மரித்தவர்களானார்கள். தேவனோடு உள்ள உறவு துண்டிக்கப்பட்டது. ஒரு மனிதன் சரீரத்தில் மரிக்கும்போது அவனுடைய உயிரானது சரீரத்திலிருந்து பிரிந்து, அவன் உலகத்திற்கு மரித்தவனாயிருக்கிறானோ அவ்விதமே அவன் ஆத்துமாவில் நித்திய ராஜ்யத்திற்கும் மரித்துப்போனான். சரீரத்திலும் மரணத்தின் செயல்பாடு ஆரம்பமாயிற்று. அதுவே சரீர மரணத்தை உண்டாக்குகிறது.
இவ்விதமாக மரித்துப்போன ஆத்துமாவில் தமது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவன் ஜீவனுக்குள் கொண்டு வருகிறார். ஆகவேதான் தேவனுடைய வார்த்தை ‘அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்பித்தார்’ எபேசியர் 2 : 1) என்று சொல்லுகிறது. ஆகவே இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு மனிதனிலும் இந்த ஆவியின் உயிர்த்தெழுதல் தான் மறுபிறப்பு என்றும் அழைக்கப்படுகிறது. உன்னில் இந்த உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறதா?
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.