அக்டோபர் 23
‘உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்’ (லூக்கா 21:19)
பொறுமை ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம் பொறுமையுள்ளவன், தன் வாழ்க்கையில் விலையேறப்பெற்ற ஐசுவரியத்தைக் கொண்டிருக்கிறான். அவன் வாழ்க்கையில் தேவையற்ற அநேக பிரச்சனைகள், குழப்பங்கள், வேதனைகளுக்கு பொறுமையினால் விலகியிருப்பான். நம் ஆத்துமாவுக்கு விரோதமாகத்தான் எத்தனை எதிராளிகள்! அதில் முக்கியமான ஒன்று பொறுமையின்மை. நல்ல அமைதியான அநேக நன்மைகளை இது கெடுத்துவிடுகிறது. உன் வாழ்க்கையில் பொறுமையின்மை எத்தனை முறை அவ்விதம் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது என்பதை யோசித்துப்பார். அது உன் ஆத்துமாவின் சமாதானத்தையும், அதோடு நின்றுவிடாதபடி மற்றவர்களுடைய சமாதானத்தையும் எவ்வளவு சீக்கிரமாய் கெடுத்துவிடுகிறது!
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தை காத்துக்கொள். அதினின்று ஜீவ ஊற்று புறப்படும் என்று வேதம் சொல்லுகிறது. பொறுமை உன் ஆத்துமாவை அமைதியில் காத்துக்கொள்ளுகிறது. சோதனையில் உன் ஆத்துமாவை அமைதியுடன் பொறுமையுடன் காத்துக்கொள்ள வேண்டும். சோதனை ஆத்துமாவைப் பின்னடையச் செய்யும். (லூக்கா 8 : 13) ஆனால் பொறுமையுள்ளவர்கள் தங்கள் ஆத்துமாக்களைப் பின்வாங்குதலில் இருந்து காத்துக்கொள்ளுகிறார்கள்.
உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் (ரோமர் 12:12) உன் உபத்திரவத்திலே கலங்காதிருங்கள்.தேவனை சார்ந்துக்கொள். தேவன் உன்னை விடுவிப்பார். கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். (சங்கீதம் 40:1) பொறுமையுள்ள மக்களை தேவன் நோக்கிப் பார்க்கிறார். பொறுமையில்லையென்றால் நீ கர்த்தருக்குக் காத்திருக்கமாட்டாய். ஆனால் பொறுமையோடு காத்திருந்தால், ஜெபிக்கிற ஜெபத்தைக் கேட்டு, ஏற்ற பதிலை தேவன் அனுப்புவார். பொறுமையின் ஜெபம் மேலான ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும். உன் பொறுமைக்காக தினமும் தேவனிடத்தில் ஜெபி. தேவன் உனக்கு பொறுமையைக் கொடுப்பார்.