கிருபை சத்திய தின தியானம்
செப்டம்பர் 14 வனாந்தரமாகும் எசேக் 35:1-9
“உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்,
நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வாய்” (எசே 35:4)
அநேகர் தான் நினைத்தைச் செய்யமுடியும், தான் திட்டமிட்டதை நிறைவேற்றுவேன் என்று எண்ணுகிறார்கள். ஆகவே தேவனைத் தேடவேண்டுமென்று இம்மி அளவுக்கூட அவர்கள் எண்ணுவதில்லை. ஆனால் அற்ப மனிதனே! உன் நினைவு அப்படியிருக்குமானால் அது எவ்வளவு மதியீனம் என்பதை அறிவாயா? உன் நாசியின் சுவாசம் தேவனின் கையில் என்பதை அறிந்து கொள்.
இன்றைக்கு தேவன் உனக்கு வசதிகளையும், வாய்ப்புகளையும் கொடுத்திருப்பாரானால் அது தேவனுடைய ஈவு என்று சொல்லி தேவனுக்கு நன்றி சொல்லு. இன்று உன் ஜீவன் அவர் கொடுத்த பிச்சை என்று நடுக்கத்துடன் அவரை சேவி. அப்பொழுது பிழைப்பாய். அவரை அண்டிக்கொள்வதே நலம்.
அதே தேவன் “அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும், அதனால் நான் கர்த்தர் என்று அறிந்துக்கொள்வீர்கள்” (எசே 36:10,11) என்று சொல்லுகிறார். ஆபத்து கிட்டும் பொழுது தேவனை அண்டிக்கொள்வது நலம். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்களே, நீ எப்படி, கர்த்தரை அணடிக்கொள்ள விரும்புகிறாய்? அவரால் தண்டிக்கப்படுவதின் மூலமா? அல்லது அவரால் ஆசீர்வதிக்கப்படுவதின் மூலமா? “மேட்டிமையான புயம் முறிக்கப்படும்”(யோபு 38:15) என்று வேதம் சொல்லுகிறது. அருமையானவர்களே, கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்படுவோமாக. “சிறுமைப்பட்டு, ஆவியில் நெறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கி பார்ப்பேன்” (ஏசாயா 66:2) என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவனுடைய வார்த்தையின் அளவைப் பார்க்கும்போது நாம் எவ்வளவாக ஆவிக்குரிய வாழ்வில் குறைவுள்ளவர்களாக இருக்கிறோம் என்று சிந்தித்து மனந்திரும்புவாமாக. அமெரிக்காவில் உயர்ந்த இரட்டை கோபுரங்கள் அழிய எவ்வளவு காலமாயிற்று? ‘அவர் கட்டளையிட நிற்கும்’ .தீங்கு நாளுக்காகத் துன்மார்கர்களையும் உண்டாக்கினார்.( நீதி 16:4)