“இவரே சமாதான காரணர்” (மீகா 5:5)
நாம் சமாதானமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சமாதானக் குறைச்சல் மலிந்துக்கிடக்கின்றது. நாட்டுக்கு நாடு சமாதானமின்மை, சமாதானமற்ற சூழ்நிலைகள் எங்கும் காணப்படுகிறது. சமாதானமின்மை அநேக குடும்பங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமாதானமின்மை குடும்பங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள் மத்தியிலுறவைப் பாதிக்கிறது. வெறுப்பு, கசப்பு போன்ற கனிகள் அங்கு காணப்படுகின்றன. தனிமனிதனுடைய வாழ்க்கையிலும் இருதயத்திலும் சமாதானமின்மை ஆளுகை செய்கிறது.
மேலலே சொல்லப்பட்ட இந்த வசனத்தை மீகா தீர்க்கத்தரிசி, வரப்போகிற மேசியாவான ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து இவ்விதம் சொல்லியிருக்கிறார். ‘இவரே சமாதான காரணர்‘ இவரே சமாதானத்தின் ஊற்று, இயேசு இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. இயேசுவின் ஆளுகை இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. அநேகருடைய வீட்டில் ‘இயேசுவே இந்த வீட்டின் தலைவர்‘ என்ற வசனப்பலகை மாட்டாப்பட்டிருக்கும். ஆனால் அங்கு நடப்பதற்கும் இயேசுவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அன்பானவர்களே! மெய்யாலும் இயேசு உங்கள் வீட்டின் தலைவராக இருக்கிறாரா? அவரின் ஆளுகை உங்கள் வீட்டில் உண்டா? அவருடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறதா? சிந்தித்துப் பாருங்கள்.
இயேசு ஒருவரே மெய்யான சமதானத்தை நமக்குக் கொடுக்க வல்லவர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு கலங்கிப்போன சீஷர்களைப் பார்த்துசொன்னதைப் பாருங்கள்: “சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்கு பயந்ததினால் கதவுகள் பூட்டப்பட்டிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்” (யோவான் 20:19). இயேசு ஒருவரே நமக்கு சமாதானத்தைக் கொடுக்கிறவர். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27).