ஆகஸ்ட் 2
“கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்” (யோபு 42:12)
யோபுவின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆவிக்குரிய பெரிய சத்தியங்களைப் போதிக்கிறதாயிருக்கிறது. அதேபோல் யோபுவின் மனைவி மூலமாயும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் உண்டு. துன்பங்கள் தொடர்ந்து வந்த போது யோபுவின் மனைவி “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனை விடும்” (யோபு2:9). இன்றைக்கு அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாய் சென்றுக்கொண்டிருக்கும்போது பக்தியுடன் காணப்படுவார்கள். ஆனால் கஷ்டம் வந்துவிட்டாலோ, அவர்கள் பக்தி காற்றில் பஞ்சு பறப்பதுபோல, வேகமாய் பறந்து விடுகிறது. நீ எத்தனை சமயங்களில் உன் பக்தியின்மையை வெகு சீக்கிரத்தில் வெளிப்படுத்திவிடுகிறாய்.
உன் வீட்டில், வேலை செய்யும் இடத்தில், கொஞ்சநேரத்தில் சட்டென அவிசுவாச வார்த்தைகளைக் கொட்டுகிறாய். அது மற்றவர்களுக்கு வெகு இடறலாயிருக்குமே என்று யோசித்தும் பார்ப்பதில்லை. உன்னுடைய பிள்ளைகள் உன் அவிசுவாச வார்த்தைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நீ சிந்திப்பதில்லை. வார்த்தைகள் உதட்டை தாண்டுவதற்கு முன்பாக அது எவ்வளவு தூரம் சரி, என்பதை நீ சிந்திப்பதில்லை.
ஆனால் யோபு அவ்விதம் உடனடியாக வார்த்தைகளை அள்ளி வீசவில்லை. நிதானமாக பேசுகிறான். ஆண்டவரே, அவனை குறித்து சொல்லும்போது “என் தாசனாகிய யோபு பேசினது போல் நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய் பேசவில்லை.” மேலும் யோபுவின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்த காரியம், பொறுமை. பொறுமைக்கு எப்பொழுதும் பலன் உண்டு. பொறுமை ஒருபோதும் வீணல்ல. அவசரப்படுவது வீண். அவசரப்பட்டு, கோபப்பட்டு, செயல்படுவது வீணாய் முடியும். யோபுவின் பொறுமைக்கு தேவன் பலன் கொடாமல் போனாரா? இல்லை. அவனை தேவன் இரண்டு மடங்காக ஆசீர்வதித்தார். பொறுமையின் ஆசீர்வாதம் எப்போதும் இரட்டிப்பாக இருக்குமேயொழிய ஒருபோதும் குறைவுபடாது.