கிருபை சத்திய தின தியானம்
செப்டம்பர் 1 பெரிதானவைகளைக் காண்பாய் (யோவான் 1:40-51)
‘இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்’ (யோவான் 1:50)
நம்முடைய வாழ்க்கையில் நாம் கண்டிருக்கிற தேவனுடைய செயல் ஆரம்பமே. இம்மட்டும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் செய்திருக்கிற மகத்துவமான செயல்களும், ஆச்சரியமான கிரியைகளும் தேவன் நமக்கு கொடுக்கிற மோட்சத்தின் முன்னான ருசி மட்டுமே. இன்னும் நாம் காணவேண்டிய தேவனுடைய வல்லமையான கிரியைகள் உண்டு. ஆகவே நாம் விசுவாசத்தோடே பெரிய காரியங்களை தேவனிடத்திலிருந்து எதிர்பார்க்கலாம்.
நாத்தான்வேல் ஆண்டவராகிய இயேசுவை சந்தித்தபோது, ‘அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய், இதிலும் பெரியதானவைகளைக் காண்பாய்’ என்றார். இதைச் சொன்னவுடன் நாத்தான்வேல் மிகவும் ஆச்சரியப்பட்டு தன்னைப் பற்றி எப்படி இவரால் சொல்ல முடிந்தது? இவர் மெய்யாலுமே தேவனுடைய குமாரன்தான் என்று எண்ணினபோது அவனுக்கு இவ்விதமாய் சொல்லப்பட்டது.
நம்முடைய வாழ்க்கையிலும் விசுவாசம் இதுவரைக் கண்டிராத மேன்மையான, உன்னதமான காரியங்களைக் காணச்செய்யும். விசுவாச வாழ்க்கையென்பது நம்மில் மேலும் பெரியக் காரியங்களைச் செய்கிற வாழ்க்கை. நமது நாட்டிற்கு வந்த வில்லியம் கேரி, இவர் ஒரு சாதாரண எளிய செருப்பு தைக்கும் தொழிலாளி. ஆனால் அவருடைய விசுவாசம் மேலான காரியங்களை தேவனிடத்திலிருந்து எதிர் பார்க்கச்செய்தது. அவருடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று தெரியுமா? ‘தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார், தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்.’ அன்பானவர்களே! தேவன் இந்த மனிதரை ‘தற்கால மிஷினரிகளின் தந்தை’ என்று அழைக்கப்படும் அளவிற்கு முன் மாதிரியாகவும், தேவனுடைய வல்லமையான காரியங்களை நமது நாட்டில் செய்ய, கருவியாகவும் எழுப்பினார். நீயும் விசுவாசத்தில் தேவனுடைய மகிமையைக் காணவும் பெரிய காரியங்களைச் செய்யவும் செய்வார். நீ தேவனுடைய பெரிய காரியங்களைக் காண வாஞ்சிக்கிறாயா?