நீதியின் பலிகள்  |       டிசம்பர் 12

    “நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்” (சங்கீதம் 4:5)

நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படி நீதியின் பலிகளைச் செலுத்துவது? கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழுவதே நீதியின் பலிகளைச் செலுத்துவதாகும். அநேக மக்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுபவர்களும் கர்த்தருக்குப் பிரியமில்லாத வாழ்க்கை வாழுகிறார்கள். அதுமாத்திரமல்ல, அவர்களுடைய செயல்கள், பேச்சுக்கள், சிந்தனைகள், விருப்பங்கள்  மற்ற பல காரியங்கள் எல்லாமே கர்த்தருக்குப் பிரியமற்றதாகவேக் காணப்படுகிறது. இவ்விதமான வாழ்க்கை என்பது கர்த்தரால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத வாழ்க்கையாகும்.

“கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்;” (ஏசாயா 61:8) என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்குப் பிரியமில்லாத தவறான வாழ்க்கை நாம் வாழும்பொழுது தேவன் அதை வெறுக்கிறவராக இருக்கிறார். ஆகவே நாம் எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையைக் கொண்டிருப்பது மிக அவசியம். அப்பொழுது தேவன் நம்மேல் நோக்கமாக இருந்து, நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவார் என்பதை மறந்துவிடக் கூடாது. தேவன் நமக்கு எப்பொழுதும் நன்மையான காரியங்களைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையானது தேவனுக்கு முன்பாக சரியாக இருப்பதில்லை. அப்பொழுது நம் எதிர்ப்பார்ப்பு வீணாகுமே.

“நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத் 5:23-24) என்று தேவன் சொல்லுகிறார். இது உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு மாத்திரமல்ல, ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. நாம் தேவனுக்கு விரோதமாக செய்த தப்பிதங்களை அவரிடத்தில் அறிக்கை செய்து விட்டுவிட்டு, பின்பு அவரிடத்தில் நறுங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு போகும் பொழுது நம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுகிறார். அதற்கு பதிலையும் அனுப்புகிறார். இது தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட நீதியின் வாழ்க்கை. இவ்விதமான வாழ்க்கை உன்னில் காணப்படுகிறதா?