ஜூலை 28           

‘தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.’  (சங்  51:10)

    தாவீது தன்னுடைய சோதனையின் வீழ்ச்சிக்குப் பின்பாக இவ்விதம் எழுதுகிறான். தாவீது தேவனை அதிகம் நேசித்தவன். அதிக பக்தியைக் கொண்டிருந்த மனிதன். ஆனாலும் இவ்விதமான ஒரு படுகுழியில் விழுவான் என்று ஒருகாலும் எதிர்பார்த்திருக்கமாட்டான். ஆம்!  பத்சேபாளிடத்தில் பாவம் செய்து, தேவனைத் துக்கப்படுத்தினான். எவ்வளவுபெரிய தேவமனிதன்  என்று தன்னைச் சொல்லிக்கொண்டாலும், தன்னை அவ்வப்பொழுது புதுப்பித்துக் கொள்ளவில்லையென்றால், சோதனை நேரத்தில் அவன் விழுந்துவிட  ஏதுவுண்டு. அவன் மனந்திரும்பி தேவனை நோக்கி ஜெபித்த ஜெபம்தான் 51ம் சங்கீதம்.

    ‘தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும்’. தாவீது, ஆண்டவரே ! என் இருதயத்தின் நிலை மிகவும் சீர்கேடானதாயிருக்கிறது, நீரே அதைச்  சுத்தப்படுத்த முடியும். சுத்த இருதயத்தை எனக்குத் தாரும் என்று ஜெபிக்கிறான். ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.’  (மத் 5:8)   உன் இருதயத்தில் அசுத்தமான எண்ணங்களும், அசுத்த சிந்தனைகளும், இருக்குமானால் தேவனுக்கும் உனக்கும் எப்படி தொடர்பு இருக்கமுடியும்? உன் அசுத்தத்தை அறிக்கையிட்டு, சுத்த இருதயத்தை பெறவும், அனுதினமும் சுத்திகரிக்கப்படவும், கல்வாரியண்டை  வா.   இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் சொல்லுகிறது.

    மேலும் தாவீது இவ்விதம் தேவனிடத்தில் ஜெபிக்கிறார். ஆண்டவரே! நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். நான் எவ்வளவு ஒரு ஸ்திரமான ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொண்டிராதவனாயிருக்கிறேன்! எவ்வளவு சீக்கிரம் என் உள்ளத்தில் குளிர்ந்துவிடுகிறேன், எவ்வளவு சீக்கிரம் ஜெப ஜீவியத்தை விட்டுவிடுகிறேன், எவ்வளவு சீக்கிரத்தில் தேவனுடைய வார்த்தையைக் குறித்த தாகத்தை இழந்துவிடுகிறேன். அன்பானவர்களே! உங்களுடைய நிலை இவ்விதமாக இருக்குமானால் தாவீதைப்போல தேவனை நோக்கிக் கதறுங்கள். தேவன் உங்களில் நிலைவரமான ஆவியைத் தருவார்.