கிருபை சத்திய தின தியானம் 

டிசம்பர் 1                                 திறந்த வாசல்                         வெளி 3:1–12

இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” (வெளி 3:8)

     தேவன் நமக்கு ஆவிக்குரிய திறந்த வாசலை வைத்திருக்கிறார். அடைக்கப்பட்ட கதவை அல்ல. அது அடைபட்ட வாசலாக இருக்குமானால் நாம் கடந்துச் செல்லமுடியாது. நாம் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கவேண்டும். வாசலே ஒரு வீட்டிற்கு நுழைவு வாயில், வாசல் திறக்கப்படுமானால் நாம் அதின் வழியாக சென்று அந்த வீட்டின் எல்லா அறைகளுக்கும் செல்லமுடியும். அந்த அறையில் உள்ள எல்லாவற்றையும் நாம் பார்க்கமுடியும். இங்கு திறந்து வைத்திருக்கிறேன் என்று சொல்லும்போது அவைகளை உனக்கென்றே வைத்திருக்கிறேன் என்று அர்த்தமாகும். நீ விருப்பமானவைகளை அங்கிருந்து எடுத்துச் செல்லலாம். உனக்கு இவைகள் அனைத்தும் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

     கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு மனிதனுக்கு மகாப்பெரிய பொக்கிஷசாலையை திறக்கிறது. அவன்  இந்த சுவிசேஷத்தை ஏற்று வரும்போது, ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கும் போது இந்த பொக்கிஷசாலை அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொக்கிஷ சாலையில் ஒரு விசுவாசிக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன. இந்த உலகில் அவன் கிறிஸ்துவின் பிள்ளையாக வாழ, ஜீவிக்க தேவையான அனைத்தும் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுவே இந்த பொக்கிஷ சாலையாகவும் இருக்கிறார். அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும் மீட்புமானார். ( 1கொரி 1:31)

    அன்பான சகோதரனே! சகோதரியே! நீ இன்னும் ஆவிக்குரிய தரித்திரனாய் வாழுவது எவ்வளவு வருத்தமான காரியம். உனக்கு என்ன தேவையோ அவைகளை நீ இலவசமாய் எடுத்துக்கொள்ள திறந்திருக்கிற பொக்கிஷ சாலையை பார். உனக்கு, தேவனுக்கென்று சாட்சிபகர ஆவியானவரின் வல்லமைவேண்டுமா, பொறுமை, நீடிய சாந்தம் வேண்டுமா, பரிசுத்த வாழ்க்கை வேண்டுமா, உன் ஆவிக்குரிய வாழ்க்கையின் தேவை எதுவாக இருந்தாலும் நீ வா, விசுவாசத்தினால் அவைகளை எடுத்துக்கொள்ளலாம். நீ வெறுமையாய்த் திரும்பவேண்டிய அவசியமில்லை. இதைக்காட்டிலும் மேலானது உனக்கு என்ன வேண்டும்? இன்னும் தாமதியாமல் திறந்த வாசலில் பிரவேசி.