கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 5               சாந்த குணம்             மத்தேயு 5:1–10

‘சாந்த குணமுள்ளவன் பாக்கியவான்’ (மத் 5:5)

    இன்று மனிதர்கள் சொல்லப்போனால், விசுவாசிகள் மத்தியிலேயே இந்தக் குணத்தை காண்பது மிகவும் அரிதாயிருகிறது. அநேகர் இந்த நாட்களில் இவ்விதமான குணத்தைக்  கொண்டிருப்பது மிகமிக கடினம் என்று சொல்லுவார்கள். ஆம்! கடினம்தான். சாந்த குணம் இயற்கை மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதனுக்கு இயற்கையாக இருக்கும் குணம் சாந்தத்திற்கு முரண்பாடான கோபம், பகை, வெறுப்பு, படபடப்பு ஆகியவைகள்.

    அப்படியானால், நான் சாந்த குணத்தை எப்படி சுதந்தரித்துக் கொள்வது. என்று கேட்க்கிறாயா? சாந்தத்தின் ஊற்றாகிய இயேசுவை நோக்கிப்பார். ‘நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று இயேசு சொல்லியிருக்கிறார். அவர் இந்த உலகில் பொல்லாத மனிதர்களிடத்தில் எவ்விதம் சாந்தத்தை வெளிப்படுத்தினார் என்பதை எண்ணிப்பார். சிலுவைப்பாடுகளில் ஆண்டவராகிய இயேசுவின் சாந்தம் எவ்விதம் வெளிப்பட்டது என்பதை சிந்தித்துப்பார். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கத்தக்கதான சாந்தத்தை இயேசு வெளிப்படுத்தினார்.

    இரண்டாவதாக, நீ ஆண்டவராகிய இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கவேண்டும். நுகத்தை ஏற்றுக்கொள்வது என்பது சாந்தத்தை உன்னில் ஏற்படுத்தும்படியாக தேவன் உபயோகப்படுத்தும் வழிகளை ஏற்றுக்கொள்வது. நீ எப்போது சாந்தத்தைக் கற்றுக்கொள்வாய்? எப்போது சாந்தம் உன்னில் வெளிப்படும்? உனக்கு கோபத்தை, வெறுப்பை, எரிச்சலை உண்டாக்கும்படியான காரியங்கள் வரும்போதுதான். அந்த வேளையில்தான் சாந்தத்தைக் கற்றுக்கோள்ள முடியும், சாந்தத்தை பயிற்சிபண்ணமுடியும்.

    மூன்றாவதாக, கற்றுக் கொள்ளும்படியான மனப்பான்மை உனக்குத் தேவை. அதன் அவசியத்தை நீ உணரவேண்டும். அதற்காக ஞானத்தோடு கோப நேரங்களில் ‘நான் இந்த நேரத்தில் கர்த்தருடைய கிருபையால் இந்தக் கோபத்தை மேற்கொள்வேன்’ என்று தீர்மானமாகக் கற்றுக் கொள்ள உறுதியாயிரு. அப்பொழுது நீ நிச்சயமாய் சாந்த  குணத்தில் வளருவாய்.