“யாக்கோபின் வம்சத்தாரே கர்த்தருடைய வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்” (ஏசாயா 2:5).
என்ன ஒரு அருமையான ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தக் கூடிய தேவ வசனம் இது! தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் இணைந்து ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு, கர்த்தருடைய பணியில் அவருடைய ராஜ்யத்தில் நாம் இணைக்ப்பட்டிருப்போமானால் அது எவ்வளவு சந்தோஷமான காரியம்! இருள் நிறைந்த இந்த உலகத்தில் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ தேவன் நம்மை நியமித்திருக்கிறார். நமக்கு தேவனுடைய வெளிச்சம் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த இருண்ட உலகில் தேவனுடைய பிள்ளைகள் வெளிச்சத்தைக் காட்டுகிறவர்களாக இருப்பது மிகப் பெரிய ஒரு சிலாக்கியம். அதற்குப் பொறுப்புள்ளவர்களாகவும் இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் இணைந்து மற்றவர்களை உற்சாகப்படுத்துவதும், உலகத்திற்கு வெளிச்சத்தைக் காட்டுவதும் நாம் செய்யக்கூடிய மிக உன்னதமான காரியம். தேவனுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இவ்விதமான சிலாக்கியங்களை நாம் எண்ணிப்பார்க்கும் பொழுது நாம் இன்னுமாக ஆண்டவருடைய கிருபைக்கும்,பணிக்கும் நம்மை ஒப்புவிக்கவேண்டியது எவ்வளவு தேவை என்பதை நாம் சிந்திக்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது. இந்த உலகத்திற்கு இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக நாம் வாழுவது எவ்வளவு பெரிய சிலாக்கியமானது! அது உத்திரவாதமுள்ளது. அவருடைய பணியில் தீவிரமாய் செயல்படுவோம். நிச்சயமாக தேவன் நம்முடைய வாழ்க்கையும் நம் பணியின் மூலமாக அநேகருடைய வாழ்க்கையும் பிரகாசிப்பித்து உன்னதமான தேவனின் மகிமையை விளங்கப்பண்ணுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.