கிருபை சத்திய தின தியானம்
நவம்பர் 14 உலக சிநேகம் யாத் 34:1-12
நீ போய் சேருகிற தேசத்தின் குடிகளோடு
உடன்படிக்கை பண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்‘ (யாத் 34:12)
தேவனுடைய பிள்ளைகள், தாங்கள் ஐக்கியம்கொள்ளும்படியான மக்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். மேலே கூறப்பட்ட வசனத்தில் தேவன் இஸ்ரவேல் மக்கள், கானான் தேசத்தை சென்றடையும் போது, அந்த தேசத்து மக்களிடம் கொள்ளும் தொடர்பைக் குறித்து எச்சரிக்கிறார். கிறிஸ்தவர்கள் இதை அற்பமாக எண்ணக்கூடாது. அது உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக இருக்காது.
சில கிறிஸ்தவர்கள் தேவனை அறியாத நண்பர்களோடு அதிகமான பழக்கங்களும், நட்பும், உறவும் நெருங்கிய ஐக்கியமும் கொண்டிருப்பார்கள். இது ஆபத்தானது. தேவன் அதைக்குறித்து என்ன சொல்லுகிறார்? அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப் பண்ணுவார்கள் (யாத் 23:33).
“கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2 கொரி 6:15). அப்படியானால் அவர்களை முற்றிலும் விலக்கிப்போடுவதல்ல. அவர்களை நேசிக்கவேண்டும். கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவித்து, அவர்களை தேவனுக்குள் கொண்டுவர பிரயாசப்பட வேண்டும்.
சங்கீதக்காரன் என்ன சொல்லுகிறார்? வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தை பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். (சங் 26:4,5) நீ எப்போதும் தேவபிள்ளைகளின் ஐக்கியத்தை தேடு. அதை வாஞ்சித்து ஜெபி. தேவன் சரியான விசுவாசியின் ஐக்கியத்தைக் கொடுப்பார். அது உன் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். ஆவிக்குரிய நண்பர்களைக் கொண்டிருப்பது மிக ஆசீர்வாதமாய் இருக்கும். தாவீதும் யோனாத்தானும் கொண்டிருந்த நட்பு, எவ்விதம் அவர்களின் தேவனுக்குள்ளான அன்பை பெலப்படுத்திற்று. ‘உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?’ (யாக் 4:4). வேதத்தின் எச்சரிப்புகளை இவ்விதமாக எடுத்துக்கொள்வது ஆசீர்வாதமாயிருக்கும்.