“ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்.” (மல்கியா 4:2).
தேவனுக்கு பயப்படுகிற பயம் பொதுவாக குறைந்த போன நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேவனுக்கு பயப்படுவது என்பது நமக்கு எப்பொழுது வரும்? தேவன் யார் என்பதைக் குறித்து அறிந்திருக்கும் பொழுது, இந்த தேவன் எவ்வளவு உன்னதமானவர் அவருடைய வல்லமை மேன்மை, மகத்துவம் எவ்வளவு பெரியது என்பதை நாம் சரியாக அறிந்திருக்கும் பொழுது அவருக்குப் பயப்படுவோம். ஆனால் இந்த பயத்துக்கும் மற்றப்படி நாம் வெறுமையாக பயப்படுவதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இந்த இடத்தில் சொல்லப்பட்டுருக்கிற காரியம் ஒரு பரிசுத்த பயம். அதாவது இவ்வளவு பெரிய ஒரு தேவன் எவ்வளவு மேன்மையானவர், எவ்வளவு வல்லமையுள்ளவர், எவ்வளவு கிருபையுள்ளவர் அவரை குறித்த உண்மையான விளங்குவதிற்குரிய ஒரு பயம். மற்ற பயத்துக்கும் இதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இவ்விதமான ஒரு பயம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பொழுது வேதம் சொல்லுகிறது, நீதியின் சூரியன் உதிக்கும். நம்முடைய வாழ்க்கையில் பிராகாசமானது காணப்படும். தேவனுடைய சத்தியத்தின் வெளிச்சம் நம்மைப் பிரகாசிக்கப்பண்ணும். அவ்விதமான ஒரு வாழ்க்கை நம்முடைய வாழ்க்கையில் இருக்குமானால் எவ்வளவு நலமான காரியம் இல்லையா? இந்த வேதத்தில் தேவனைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்துகொண்டிருக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் பரிசுத்த பயத்தை கொண்டிருப்போம். எந்த அளவுக்கு தேவனுடைய மேன்மையும், மகத்துவத்தையும் விளங்கிகொண்டு வாழுகிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் உன்னதமான சத்தியத்தின் வெளிச்சமானது நம்மில் பிரகாசிக்கும். நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவோம். நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய நிலையில் பெலவான்களாய் காணப்படுவோம். தேவனுக்குள் உன்னதமானவர்களாய் காணப்படுவோம். எழும்பி பிரகாசிக்கிறவர்களாய் காணப்படுவோம். அடுத்த வசனத்தில் சொல்லப்படுகிறது, துன்மார்க்கரை மிதிப்பீர்கள் என்று. பொல்லாப்பை, அநீதியை நாம் அழிக்கிறவர்களாய் காணப்படுவோம். என்ன ஒரு வெற்றியான வாழ்க்கை இதுவல்லவா! ஆகவே தேவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கொண்டவர்களாய் நாம் வாழுகிற ஒரு அருமையான வாழ்க்கையைக் கொண்டிருப்போம்.