கிருபை சத்திய தின தியானம்
செப்டம்பர் :12 தேவ செயல் பிரசங்கி 7:1-13
“தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்” (பிரசங்கி 7:13)
தேவனை அறியாத ஒரு மனிதன் இந்த உலகத்தின் சம்பவங்களை, தன் வாழ்க்கையில், தன் குடும்பத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தானாய், இயற்கையாய் நேரிடுகிறதென்றோ, விஞ்ஞானத்தால் நேரிடுகிறதென்றோ, விதி செயல்படுகிறதென்றோ எண்ணுவான், சொல்லுவான். ஆனால் ஒரு தேவனுடைய பிள்ளை அப்படியல்ல அதை தேவனுடைய செயலாகவே பார்ப்பான். தன்னுடைய வாழ்க்கையில் நேரிடுகின்ற ஒவ்வொரு சம்பவத்திலும் அது உயர்வானாலும் தாழ்வானாலும், இன்பமானாலும் துன்பமானாலும், நன்மையானலும் தீமையானாலும் தேவன் ஒரு நோக்கத்திற்காகவே இதை அனுமதிக்கிறார், செய்திருக்கிறார் என்று பார்ப்பான்.
யோசேப்பு தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய செயல்பாட்டை, கரத்தைப் பார்த்தான். யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்குத் தீமைசெய்தார்கள். ஆனால் யோசேப்பு என்ன சொன்னான், ‘நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால் நீங்கள் சஞ்சலப்படவேண்டாம், ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும் பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்‘. (ஆதியாகமம் 45:4,5,7)
மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதகமான சம்பவங்களுக்கு மற்றவர்களை வெகு சீக்கிரத்தில் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதனால் இருதயத்தில் மற்றவர்களைக் குறித்து வெறுப்பு, கசப்பு, பகை ஆகிய இவைகள் அதிகரிக்கின்றன. ஆனால் மெய்யான விசுவாசி அப்படியல்ல. எல்லாவற்றையும் தேவன் அனுமதிக்கிறார். இது தேவனுடைய செயல் என்று நம்புகிறான். ‘தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று நான் நிச்சயத்திருக்கிறேன்‘. நான் கலங்கிப்போவதில்லை. தேவன் இதை நன்மையாக செய்து முடிப்பார் என்று விசுவாசிப்பான்.