கிருபை சத்திய தின தியானம்
நவம்பர் 8 திருவசனம் யாக்கோபு 1 : 16 – 27
‘திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாய் இருங்கள்’ (யாக்கோபு 1 : 22)
திருவசனத்தை கேட்பது மிக அவசியம். ஆம், அது ஆசீர்வாதமானது. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைப்பதற்கு அது ஒரு ஆரம்பம். வேதத்தை, சபைக்கூட்டங்களில் கேட்கிறோம். வேதத்தை வாசிக்கிறோம். ஆனால் தேவன் அதைமாத்திரம் தான் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறாரா? இல்லை, அதற்கு மேலாக தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். அது என்ன? அதன் படி செய்வதுதான். அருமையானவர்களே! ஒவ்வொருநாளும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள், கேட்க்கிறீர்கள் ஆனால் நீங்கள் அதன்படி செய்யவேண்டுமென்று விரும்புகிறீகளா? இது மிக மிக அவசியம்., இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. (வெளி 1 : 3)
அப்படிக் கேட்டும் அதன்படி செய்யாதவர்களைக் குறித்து வேதம் என்னச் சொல்லுகிறது? அவர்கள் தங்களை வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள். (யாக்கோபு 1 : 22) அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள். வேதம் உன் இருதயத்தின் நிலையை வெளிப்படுத்திகிறது. உன் ஆத்துமாவின் தேவையை உணர்த்துகிறது. உன் பாவத்தன்மையைக் குறித்து உனக்கு எடுத்துச் சொல்லுகிறது. நீ அவைகளைக்கேட்டு அதன்படி செய்ய எண்ணங்கொள்ளாதபோது தேவன் உன் ஆத்தும நன்மைக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை அலட்சியப்படுத்துகிறாய். அதைக்கேட்டும் பிறகுப்பார்த்து கொள்ளாலாம் என்று எண்ணுகிறாய். விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை பெறும் வாய்ப்பு உனக்கு இருந்தும் தரித்திரனாய் ஜீவிக்கிற மனிதனுக்கு ஒப்பிடலாம். யோசி, தேவனுடைய வார்தையின்படி ஜீவி. மிகுந்த ஆசீர்வாதம் உண்டு. ‘உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து உமது வசனத்தைக் கைக்கொள்ளுவான்.’ (சங்கீதம் 119 : 17) தேவனுடைய வார்த்தையை வாசி, அதோடு நின்று விடாதே. அதைக் கர்த்தருடைய கிருபையால் கைக்கொள்ளுவேன் என்று சொல். தேவனே அவ்விதம் கைக்கொள்ள எனக்கு பெலன் தாரும் என்று ஜெபி. தேவன் பெலன் தருவாரே.